Friday, February 22, 2013

கம்ப ரசம்



பழ ரசம் பருகியிருப்பீர்கள்.

மிளகு ரசம் பருகியிருப்பீர்கள்.

இன்று சிறிது கம்ப ரசம் பருகுவோமா?

கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி.

பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்!

வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான்.
தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி .

இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான்.

இராமனை இகழ ஆரம்பிக்கிறான்.

அதில் ஒரு பாடல்……

கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை!

”ஓவியத்தில் எழுத முடியாத அழகுள்ள ராமனே!உன் குலத்தோர் அரச தர்மம் தவறாதவர்கள். ஆனால் நீ?!சீதையைப் பிரிந்ததனால் மனம் பேதலித்து இவ்வாறு செய்தாயோ?” என்கிறான் வாலி.

இகழும்போது கூட அவன் அழகைப் புகழ்வானா என ஒரு கேள்வி!எனில் வேறு என்ன 
பொருள் கொள்ளலாம்?

அக்காலத்தில் மன்னர்களின் வீரச் செயலை ஓவியமாகத் தீட்டி வைப்பர்(புகைப்பட வசதி கிடையாது!)அவ்வாறு” இந்த நிகழ்ச்சியை ,நீ என்னைக் கொன்ற நிகழ்ச்சியை, படமாகத் தீட்டினால் உன்னை அதில் எழுத முடியாது;ஏனெனில் நீ மறைந்திருந்து கொன்றாய்,   எனவே ஓவியத்தில் தெரிய மாட்டாய் “என்பதும் ஒரு பொருளாகத் தோன்றுகிறது .

அதுவே கம்ப ரசம்.

இன்னொரு பாடல்.

கைகேயி இராமனிடம் ”பரதன் அரசாளவும்,நீ மரவுரி தரித்துக் காட்டுக்குப் பதினான்கு ஆண்டுகள் போகவும் வேண்டும் என அரசன் சொன்னான்” என்றுசொல்கிறாள்

அப்போது இராமன் சொல்கிறான்...

'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்

”தசரதன் சொல்லாமல் நீங்களே சொன்னாலும் நான் மறுப்பேனா?பரதனுக்குக் கிடைத்தால் எனக்கே கிடைத்த மாதிரிதானே” எனச் சொல்கிறான்.

இதையே வேறு கோணத்தில் பார்க்கலாம்.

“ இது மன்னவன் பணியன்று;

ஆனாலும் உங்களின் இந்தப்பணியை நான் மறுப்பேனா?

நான் பெறப்போகும் அதே செல்வத்தைத்தானே(மரவுரி)பரதனும் பெறப்போகிறான் (அடியனேன் பெற்றதன்றோ என் பின்னவன் பெற்ற செல்வம்).

நடந்த உண்மையையும்,நடக்கப்போகும் உண்மையையும் இராமன் கூறுவது போல் உள்ளதல்லவா?

இதுதான் கம்பரசம்!

பிறிதொரு சமயம் இன்னும் கொஞ்சம் கம்ப ரசம் பருகலாமா?

(வாரியார் ஸ்வாமிகள் சொல்லக்கேட்டவை)

37 comments:

  1. கம்பர் ரசம் அருமை. மேலும் பருக ஆசை!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சில கோப்பைகள் தர முயல்வேன்!
      நன்றி ஐயா

      Delete
  2. ஆஹா ......அருமை ...அருமை ....
    இன்னும் பருக ஆசை ..........
    கிடைக்குமா ..............

    ReplyDelete
    Replies
    1. தர முயல்வேன்!
      நன்றி காந்தி

      Delete
  3. அருமையான கண் ணோட்டமுடைய ரசம்

    ReplyDelete
  4. ரசம் சுவைத்தது.
    முதல்வர் அண்ணாதுரையையும் நினைக்கவைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தலைப்பே அவர் தந்ததுதானே!
      வருகைக்கு நன்றி யோகன்!

      Delete
  5. சுவைமிகு ரசம்! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. குட்டன் ஐயா....
    உங்களின் “கம்ப ரசம்“ என்ற தலைப்பைப்ப பார்த்ததும்
    அண்ணா அவர்களின் “கம்பரசத்தை“ தான் நினைத்தேன்.

    (இதில் ஒரு பெரிய விசயம் என்னவென்றால்
    நான் கம்பனைப் படிக்கும் முன்
    கம்பரசத்தைப் படித்துவிட்டேன்....
    (அப்பொழுது என் வயது 14 தான்)
    அதைப்படித்து விட்டபின் “ஐயே... இதுதான் கம்பராமாயணமா?“
    என்று பிறகு கம்பனைப் படிக்க விரும்பவில்லை.
    ஆனால் முதுகலையில் கம்பனைப் படித்தே
    ஆக வேண்டி வந்தபோது முழுவதுமாகப்
    படித்தேன். அதன் சுவையே தனிதான்.

    இப்படியான இரண்டு அர்தங்கள் கொண்டும் இருப்பதை
    உங்களைப் போன்றவர்கள் சொல்லக் கெட்க
    மேலும் ஆனந்தம்.
    நன்றி குட்டன் ஐயா. 5

    ReplyDelete
    Replies
    1. பாடமாக இல்லவிடினும் கம்பனைப் படித்து ரசித்தவன் நான்!அவ்ர்களுக்கு வேண்டிய சிறு பகுதியை பூதக்கண்ணாடி போட்டுத்தேடி,காப்பியத்தையே குறை கூறிவிட்டார்கள்!
      கருத்துக்கு நன்றி அருணா செல்வம்

      Delete
  7. கம்ப ரசம்...ம்ம்ம்...Always yummy...

    ReplyDelete
  8. நடந்த உண்மையையும்,நடக்கப்போகும் உண்மையையும் இராமன் கூறுவது போல் உள்ளதல்லவா?

    இதுதான் கம்பரசம்!

    ரசிக்கவைக்கிறது ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. இணைத்து விட்டேன்.
    நன்றி

    ReplyDelete
  10. கம்பரசம் - கருத்து ரசமாகி சிந்தை கவர்ந்தது! நன்றி குட்டன் அவர்களே!

    ReplyDelete
  11. இப்படியும் இரண்டு அர்த்தம் கொள்ளலாமோ. அருமையாக இருக்கின்றது. தொடருங்கள்.

    ReplyDelete
  12. சுவையான கம்பரசமும் அருமை

    ReplyDelete

  13. வணக்கம்

    கம்பன் வடித்த கவிதைகளைக்
    கற்றால் தமிழின் சுவையறிவார்!
    நம்பன் இராமன் மொழியழகும்
    நங்கை சீதை விழியழகும்
    நம்முள் தங்கிக் கமழ்ந்திட்டால்
    நற்றேன் பாயும் வாழ்வினிலே!
    எம்மண் கொண்ட மாண்புகளை
    இயம்பும் சீதை பெருங்கதையே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா் கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

  14. மிண்டும் வணக்கம்

    ரசம் என்பது தமிழ்ச்சொல் அன்று
    எனவே

    கம்பன் சுவை அல்லது
    கம்பன் வளம் என்று எழுதலாம்

    ReplyDelete
    Replies
    1. ரசம் என்ற சொல்லைப் பயன்படுத்தக்காரணம், அது பலருக்குப் பழையவற்றை நினவூட்டும் என்பதாலே!

      Delete

    2. வணக்கம்!

      தமிழ் அல்லாத சொற்களை நீக்குதலும்
      புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குதலும்
      தமிழ் காப்போர் கடமை!

      பழமை எனயெண்ணி அப்படியே ஆளுதல்
      சிறப்பன்று!

      எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் என்ற நிலையை
      உருவாக்கவேண்டம்!

      எந்த நிலையிலும்
      பிரஞ்சுக் காரா்கள் ஒருசொல் கூட ஆங்கிலம் கலந்து
      எழுதவோ பேசவோ மாட்டார்கள்!

      எல்லா மொழியும் கலந்து வளா்ந்துள்ள ஆங்கில மொழியிலும்
      தனித்த ஆங்கில இலக்கியப் போக்கு உண்டு!

      தனித்தமிழ் போற்றும் தமிழா்தம் நுாலைப்
      அணிந்து மகிழும் அகம்!

      Delete
  15. அருமை... கலக்குங்க நண்பா...

    ReplyDelete
  16. கம்ப ரசம் அருமை தொடர்ந்து பருக ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஓரிரு கோப்பைகள் தர முயல்வேன்.
      நன்றி

      Delete
  17. hi it is so nice,,,,I'll expect more from you....

    ReplyDelete
  18. hi it is so nice,,,,I'll expect more from you....

    ReplyDelete