Thursday, November 29, 2012

விளக்குப் பிடித்தவன்!



குருசாமியை முகேஷ் சார் அழைப்பதாக ஒரு பையன் வந்து சொன்னான்.

குருசாமி உடனே அவரைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றான்.அவர் மனைவியுடன் அமர்ந்திருந்தார்.

“வாப்பா,குரு!உனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணியிருக்கேன்.என் முதலாளிக்கு ஊருக்கு வெளியே ஒரு பண்ணை வீடு இருக்கிறது.அங்கு இருந்த காவலாளி வேலையை விட்டுப் போய் விட்டான்.உடனடியாக அங்கு ஒரு காவலாளி தேவைப்படுகிறது.எனக்கு உன் ஞாபகம் வந்தது.நீ சரின்னு சொல்லி விட்டால் இன்றைக்கே சேர்ந்து விடலாம்” முகேஷ் சொன்னார்.

“பண்ணை வீடுங்கறீங்க.தோட்டம் எல்லாம் பாத்துக்கணுமோ?எனக்குத் தோட்ட வேலை யெல்லாம் தெரியாதே” என்றான் குருசாமி

முகேஷ் சொன்னார்”தோட்ட வேலையெல்லாம் வாரம் இரண்டுநாள் ஆள் வந்து செய்து விடுவார்கள்.உன் வேலை தினம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.நீ தங்குவதற்கு உனக்கு ஒரு சிறு வீடும் இருக்கிறது.நீ சமைத்துச் சாப்பிட்டு விட்டு நிம்மதியாக இருக்கலாம். வார இறுதி நாட்களில் முதலாளி அங்கு வந்து தங்குவார்.அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.மாதம் 3000 ரூபாய் சம்பளம்.என்ன சொல்கிறாய்?”

அவன் சம்மதித்தான்.அன்று மாலையே அவனைக் காரில்  அங்கு அழைத்துச் சென்றார்.அவன் தனது சிறிய மூட்டையுடன் போய்ச்சேர்ந்தான்.அங்கு சென்றதும் அவர் இடத்தையெல்லாம் காட்டிவிட்டு,”குரு,சனிக்கிழமை மாலை முதலாளி வந்து விடுவார்.ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பி விடுவார்.சனிக்கிழமை டவுனிலிருந்து ஒருவன் வந்து ரொட்டி,முட்டை,சிப்ஸ் எல்லாம் கொடுத்து விட்டுப்போவான் வாங்கி வைத்துக் கொள்.சாப்பாட்டுக்கு முதலாளியே ஏற்பாடு செய்து கொள்வார்.அவர் கூப்பிடும் குரலுக்கு உடனே போய் அவருக்குப் பணிவிடை செய். அவ்வளவுதான்.”

போய் விட்டார்.

அன்று புதன் கிழமை.இன்னும் மூன்று நாள் தனிக்காட்டு ராஜாதான்.

மூன்று நாளும் சமைத்துச் சாப்பிட்டு விட்டு-முகேஷ் கொடுத்த அட்வான்ஸில் சாமான் வாங்கி-ஜாலியாக இருந்தான்.

சனியன்று மாலை ஒரு கார் வந்து நின்றது.ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறங்கினார். அவனைப் பார்த்து ”நீதான் குருசாமியா?”எனக் கேட்டுவிட்டு,காரின் உள்ளே பார்த்து இறங்கு என்று சொல்ல ஒரு பெண் இறங்கினாள்.தலையில் தலைப்பைப் போர்த்தியிருந்ததால் முகம் தெரியவில்லை.இருவரும் உள்ளே சென்று விட்டனர்.

உள்ளிருந்து பேச்சு,சிரிப்புச் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் ஒருவன் வந்து ஒரு  அட்டை டப்பாவில் எதையோ வீட்டினுள் கொடுத்து விட்டுப் போனான்.

திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது.

வீடு இருட்டானது.

உள்ளிருந்து முதலாளியின் குரல்”என்ன இது ?இன்வெர்டர் ரிப்பேரா? குருசாமி,ஒரு மெழுகு வர்த்தி பத்த வச்சுக் கொண்டு வா”

அவன் வர்த்தியைக் கொளுத்தி உள்ளே எடுத்துச் சென்றான்.

முதலாளி ஒரு லுங்கி மட்டும் அணிந்து இருந்தார்.

டீப்பாயில் ஒரு பாட்டிலில் திரவமும்,இரண்டு கிளாஸ்களும் தட்டில் சிப்ஸும் இருந்தன.

”அதை அந்த டீப்பாய் மேலே வைத்து விட்டுப்போ”

குனிந்து வைக்கப் போகும் போது அது வரை இருட்டில் இருந்த அந்தப் பெண் மீது வெளிச்சம் விழுந்தது.

அவள் இருட்டுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டாள்.

ஆனால் அந்த ஒரு நொடியில் அவன் பார்த்து விட்டான்.

அதிர்ந்தான்”என்ன இது?இப்படியும் நடக்குமா?”

வெறுப்பு,கோபம், ஏற்பட்டது.

வெளியே வந்தான்.

காறித்துப்பினான்.

அந்த இருட்டில் வெளியே நடந்தான்.

பிரதான சாலைக்குப் போனால் பஸ் லாரி ஏதாவது கிடைக்காதா?

முகேஷ் என்ற மனிதனைப் பற்றி நினைக்கவே அருவருப்பாக இருந்தது.

அவனைப் பார்க்கவே கூடாது;ஊரை விட்டே போய் விட வேண்டியதுதான் .

நடந்தான்.


3 comments:

  1. என்ன கமெண்ட் போட என்று தெரியவில்லை.

    நோ கமெண்ட்ஸ்!

    ReplyDelete
  2. ஒன்றுமே புரியவில்லை!

    ReplyDelete
  3. அந்த இடத்தில் முகேஷின் மனைவியை பார்த்த அதிர்ச்சி குருசாமிக்கு இருக்கத்தானே செய்யும்!

    ReplyDelete