Saturday, May 4, 2013

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!



இலண்டன் போல் சென்னையும் பல கிராமங்கள் சேர்ந்த ஒரு நகரம்.

ஒரு பழைய தமிழ்ப் படத்தில்(என் மனைவி?) கோடம்பாக்கம் கிராமம் என்று வசனம் வரும்.

சென்னை மற்றும் அதன் பகுதிகளுக்குப்  அவற்றின் பெயர் வந்த காரணம் தெரியுமா?

சென்னை: 
சென்னபசவ நாயக்கன் என்பவர் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாக சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :- 
முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் - 
கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்: 
மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது

மற்றொரு பெயர் காரணம்

மா அம்பலம் :- 
ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் : 
சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாப் பேட்டையாகிவிட்டது.

கிண்டி:- 
ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:- 
ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு: 
மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்
இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்: 
பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை : 
சிறிய அளவிலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை : 
பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்: புரசைப் பாக்கம்: 
புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை: 
ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

பெருங்களத்தூர் : 
பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்: 
பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பரங்கிமலை:-
பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.

நந்தம்பாக்கம்: 
நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்: 
ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்: 
முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.(போர்+ஊர்)

 
நந்தனம்:- 
மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி : 
திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.

மாதவரம்: 
மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்: 
முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல் : 
ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......


முகலிவாக்கம் : 
கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

8 comments:

  1. சென்னையின் பகுதிகளின் பெயர்க் காரணம் பற்றிய பதிவுக்கு நன்றி.

    ஒரு சிறிய தகவல். பரங்கியர் என்பது ஆங்கிலேயரை மட்டும் குறிப்பதில்லை. Farang என்றால் வெளிநாட்டவர் என்று பொருளாம். அதனால்தான் போர்த்துக்கீசியர்கள் டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் அனைவரும் பரங்கியர்கள் என்றே சொல்லப்பட்டனர்.

    ‘தாங்கல்’ என்பது தொண்டைமண்டலத்தில் ஏரியைக் குறிக்கும். அதனால் தான் ஏரிகள் உள்ள இடங்களுக்கு பழவந்தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல், ஐயப்பன் தாங்கல் என்ற பெயர் வந்ததாம்.

    ReplyDelete
  2. தெரியாத தகவலை சொல்லியமைக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும்

    ReplyDelete
  3. ஊர்களின் பெயர்க் காரணங்கள் சூப்பர் எங்கிருந்து புடுச்சீங்க

    ReplyDelete
  4. மிகவும் அருமையான இதுவரை அதிகம் அறியாத தகவல்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. நிறைந்த தகவல்களைத் தந்துள்ளீர்கள். தெரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள். நன்றி :)

    ReplyDelete
  7. மிக அருமை என்னருமை சென்னை பழமையான நகரம், ஒருக்காலத்தில் எழில் கொஞ்சிய பகுதி. இன்று.. :( அய்யப்பன்தங்கல் - சென்னப்ப நாயக்கரின் மகன் அய்யப்ப நாயக்கர் இருந்த இடம் என்பர்..! அத்தோடு சென்னையின் பெரிய ஏரியான நுங்கம்பாக்கம் ஏரி இன்று என்னானதோ? கண்ணீர் வருகின்றது. வேளச்சேரி சதுப்பு நிலம் காணாமல் போய்விட்டது. தி இந்துவில் தொடர்ந்து சென்னைக் குறித்து பல தகவல்கள் வந்துள்ளன.. தொகுத்து தந்தால் நலம்.

    ReplyDelete