Thursday, April 10, 2014

பழம் வேண்டும்;மரம் வேண்டாம்!

மிகவும் இருண்ட ஒரு பகுதி. 

அங்கே சில மனிதப் பிறவிகள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். கிடைப்பதை உண்டு, இருந்த இடத்திலே காலம் கழிப்பவர்கள். வேறு எங்கு செல்லவும் பயம். அப்படியே சென்றாலும் கும்பலாகக் கை கோர்த்தபடி செல்வார்கள். கூச்சல் போட்டு பேசிக் கொள்வார்கள். அவர்கள் கண்களிருந்தும் குருடர்கள்.




ஒருநாள் ஒரு விசித்திரமான, புத்திசாலித்தனமான, பேசத் தெரிந்த, மனிதரைப் போல் காட்சியளித்த ஒரு பிராணி அங்கு வந்தது. அதற்குப் பதினாறு கைகள். தெறித்து விழுவது போன்ற கண்கள்; கரகரப்பான குரல்.
 
அந்தப் பிராணி அவர்களிடம் பேசியது. நிறைய அறிவுரைகள் கூறியது; புதிய வழி முறைகளைக் கூறி வழிகாட்டியது! சில மாதங்களிலேயே, அவர்கள் தனித்தனியாக நடமாடக் கற்றுக்கொண்டார்கள். தங்களுடைய உணவை வேட்டையாடத் தெரிந்து கொண்டார்கள். உணவை வேறு விதமாக சமைக்கக் கற்றுக் கொண்டார்கள்.
ஒரே இடத்தில் இருந்தவர்கள் நகர்ந்து வீடுகட்ட ஆரம்பித்தார்கள்.

படிப்படியாகப் பலமாற்றங்கள்! எல்லோரும் அந்த விசித்திரமான பிராணியை புகழ்ந்து தள்ளினார்கள்.


“வாழ்வளிக்க வந்த தெய்வம்” என்றெல்லாம் வாழ்த்தினர்.
 
ஒரு நாள் அந்த விசித்திரப் பிராணி, அனைவரையும் திரட்டி ஒரு செய்தியை அறிவித்தது.
“இனிய நண்பர்களே, என் பின்னால் வாருங்கள். நான் உங்களுக்காக செய்து வைத்திருக்கிற ஓர்அற்புதமான பொருளைக் காட்டப் போகிறேன்!”
 
மக்கள் கூட்டம் இருட்டில் அந்தப் பிராணியைப் பின் தொடர்ந்தது.


திடீரென்று அக்கூட்டம் தடுமாறியது; காரணம் அவர்கள் இதுவரை பார்க்காத “விளக்கு” அங்கே இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் கண்கூசித் தடுமாறிய மக்கள் சிறிது நேரம் கழிந்தபின் ஒருவரையொருவர் பார்க்க ஆரம்பித்தனர். உருவங்கள் பளிச்செனத் தெரிந்தன.
“ஆஹா, என்ன அழகு! என்ன கம்பீரம்!” என்று ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்; பாராட்டினர்!


விளக்கை தயாரித்து வழங்கிய அந்தப் பிராணி பெருமிதத்துடன், மகிழ்ச்சியாக அந்தக் காட்சிகளைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்தது.


கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் உரத்தக் குரலில் கூவினான், “நமக்கெல்லாம் ஒளியைக் கொடுத்த அந்த தெய்வம் எங்கே? உங்களைக் காணவேண்டும்! வாங்க!”
 
“இதோ வருகிறேன்! நான்தான் உங்களோடு இத்தனை மாதங்கள் இருந்து வழிகாட்டினேன்! இந்த விளக்கு நான் கண்டுபிடித்தது! எப்படி இருக்கிறது? உங்களுக்கு மகிழ்ச்சியா?”
 
அவர்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த அந்தப் பிராணியை அத்தனைபேரும் வியப்போடு பார்த்தார்கள்.


அவர்களுடைய முகத்திலிருந்து வியப்பு மறைந்து அருவருப்பு தோன்றியது.


“சே! என்ன கோரம்! பார்க்கவே சகிக்கவில்லை!”
 
“பதினாறு கைகளா? அசிங்கம்!”
 
“இவ்வளவு கேவலமான ஒரு பிராணியையா நாமெல்லாம் தெய்வம், வழிகாட்டி என்றெல்லாம் புகழ்ந்தோம்!”


“அடித்து துரத்துங்கப்பா! அதுபக்கத்திலிருந்தா நமக்குத்தான் அவமானம்!”


கற்கள் பறந்தன; கட்டைகள் பிராணியைத் தாக்கின! குருதி வடிய அந்த விசித்திரப் பிராணி வேகமாக வேறு ஒரு இருட்டுப் பகுதிக்கு ஓடியது!


“போகட்டும் விடுங்கப்பா! இதற்கு மேலே இங்கே வராது!”
 
கூட்டம் ஆனந்தக் கூத்தாடியது!
 
விசித்திரமான பிராணி, தனியாக உட்கார்ந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.


“சே! என்ன நன்றிகெட்ட உலகம்! இவர்களுக்கு என்னவெல்லாம் கற்றுக்கொடுத்தேன்! என்னவெல்லாம் செய்தேன்! எத்தனை மாற்றங்களை உருவாக்கிக் கொடுத்தேன்! விளக்கைக் கொடுத்தேன்! ஆனால் அதற்கெல்லாம் பரிசு, இத்தனை அடி உதைகளா?” 

வேதனையில் வெம்பியது அந்தப் பிராணி!
 
அங்கே ஆனந்தத் தாண்டவம் தலைவிரித்தாடியது! 

ஆனால் விளக்கின் வெளிச்சம் மெதுவாகக் குறையத் தொடங்கியது. ஒருவரை யொருவர் பார்த்து விழித்தனர். மேலும் மேலும் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தது. பயத்தால் கதறினார்கள்!” என்ன செய்வது?” என்று தெரியவில்லை.
 
விளக்கு அணைந்தது; முற்றிலும் இருள் கவிழ்ந்தது. அணையும் முன் ஒருவரை ஒருவர் கடைசியாகப் பார்த்துக் கொண்டனர். அதுதான் அவர்களுடைய கடைசிப் பார்வை!

இது என்ன கதை? இந்தக்கதை என்ன சொல்கிறது?

நாளை பார்க்கலாம்!


8 comments:

  1. //இந்தக்கதை என்ன சொல்கிறது?//
    நாளை நீங்கள் அது என்னவென்று சொல்லும்வரை காத்திருக்கவேண்டியதுதான்!

    ReplyDelete
  2. ஆன்மீகத்துக்கு ஆதரவான கதை போல இருக்கிறதே ?இருந்தாலும் அறிய ஆவலோடு இருக்கிறேன் !
    த ம +2

    ReplyDelete
  3. என்றும் நன்றிகெட்ட உலகம் தான்...

    யார் அந்த விஞ்ஞானி...(!) ?

    ReplyDelete

  4. நாளை நீங்கள் அது என்னவென்று சொல்லும்வரை காத்திருக்கவேண்டியதுதான்!

    ReplyDelete
  5. ஹஹஹா.. உண்மைதான் சார்.. கடவுளே நேரில் வந்தாலும் அவர் என்.டி.ஆர் சாயலில் இல்லாவிட்டால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..

    ReplyDelete
  6. சிறப்பான கதை! முடிவு என்ன ஆயிற்று என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  7. காத்திருக்கிறேன்.... :)

    ReplyDelete
  8. காத்திருக்கிறேன்...

    ReplyDelete