பெண்ணே!
நள்ளிரவில் பயமின்றி
நகை பல உடலில் பூட்டி
நங்கை ஒருத்தி சென்றால்
நன்னாளாம் சுதந்திரம் அன்றே
என்றுரைத்தார் அண்ணல் காந்தி!
அந்நாள்
என்றுதான் வரு மோடி?!
கண்ணா!
பூவலகில்
நன்மை குறைந்து
தீமை ஓங்கினால்
நல்லவரைக் காத்து
தீயவரை அழித்து
அறத்தை நிலை நாட்ட
அவசியம் வருவேனென்றாய்!
இன்று நீ கண்டிப்பாய்
வர வேண்டு மோடி! (வேண்டும்+ஓடி)
அம்மா பராசக்தி!
அன்புடன் அருள் புரிவாய்
சூலத்தைக் கையிலேந்தி
சூழ்ந்து வரும் இருள் நீக்கி
ஒளி வெள்ளம் உலகில் பாய
வந்திட வேண்டு மோடி!