Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Saturday, April 6, 2013

கேட்டதைத் தரவில்லை இறைவன்!



எனக்கு வலிமை தா எனக் கடவுளிடம் கேட்டேன்

எண்ணற்ற இடையூ றளித்து வலிமை தந்தான்!


எனக்கு நல்லறிவு தான் என அவனிடம் கேட்டேன்

எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்க சொல்லி தந்தான்!


எனக்குச் செல்வம் தா என நான் வேண்டி நின்றேன்

உழைக்கும் திறமையும் வலிமையும்  உடன் தந்தான்!


எனக்குத் துணிச்சல் தா எனப் பணிந்து கேட்டேன்

இடர் பல தந்தான்  நான் கடந்து போவதற்கு !


அன்பு வேண்டும் என அவனை நான் அணுகினேன்

வாடும் மக்கள் பலருக்கு உதவ வழி சொன்னான்!


வரங்கள் பல வேண்டும் என பரமனிடம் கேட்டேன்

வாய்ப்புகள் பல தந்து என் வாயை அடைத்தான்!


கேட்டது எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை ஆனால்


தேவையான எல்லாம் அவன் தந்தருள் செய்தான்!


Tuesday, January 22, 2013

பழனி கந்தசாமியின் சிறப்பு!




நாரதர் ஒரு கனியைக் கொடுத்துக் கலகத்தைத் துவக்க,இறைவன் அதைப் பெறுவதற்குச் சகோதரர்களுக்குப் போட்டி வைக்க,முருகன் மயில் மீதேறி உலகைச் சுற்றி வரத் தொடங்க, கணேசன் தாய்தந்தையைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் களிக்க ,திரும்பி வந்த முருகன் அதைக் கண்டு சினக்க,காவியுடை தரிக்க,தனியே சென்று இருக்க, இறைவன் ’பழம் நீ ’என்று சொல்லி அணைக்க,………காக்க காக்க கனகவேல் காக்க!

கந்தன் சென்று அமர்ந்த அந்த இடமே பழனி.

அங்கு அவன் தண்டாயதபாணி எனப் பெயர் விளங்க இருக்கலாம்.

வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயரில்---சுவாமிநாதன்,சுப்ரமணியன்,தணிகை வேலன் எனஅழைக்கப்பட்டாலும் அவன் கந்தசாமிதானே!

கந்தர் அனுபூதி,கந்தர் அலங்காரம்,கந்தர் கலி வெண்பா,கந்த சஷ்டிக்கவசம் என எல்லாம் கந்தன் என்றே குறிப்பிடுகின்றன அல்லவா?

சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை போன்ற வித்தைகளைப் பயிற்றிய இடும்பாசுரான்,.முருகனின் வேலால் அசுரர்கள் அழிந்தமையால் மனைவி இடும்பியுடன் வனவாசஞ் சென்றான். அவ்வழியில் திருக்குற்றாலத்துக்கு அருகில் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினான். அகத்தியரும் திருக்கேதாரத்தில் உள்ள வனத்தில் இருக்கும்,  சிவகிரி,சக்திகிரி என்ற இரு மலைகளை எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் பெறும் பேற்றை அடைவாய் எனக் கூறினார்.
இடும்பனும் மனைவியோடு அவ்வனத்திற்கு சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூல மந்திரங்களைக் கூறித் தவமிருந்தான். இரு சிகரங்களையும் ,தவ வலிமையால் பாம்புகளால் உறி போலச் செய்து,அதில் வைத்து, தோளில் சுமந்து  காவடி எடுப்பார்போல பொதிகை சென்றான். ஆவினன்குடியை அடைந்தபோது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி பாரமாகத் தோன்ற அதை இறக்கி வைத்தான். பின்னர் காவடியைத் தூக்க முடியாமல் போனது. அங்குள்ள மர நிழலில் தண்டாயுதபாணியைக் கண்டு அவனை விலகும்படி பணித்தான். முருகன் விலகாமல் இருக்கவே இடும்பன் கோபங்கொண்டு பாய்ந்தபோது அங்கு வீழ்ந்து இறந்தான். இடும்பியின் அழுகுரலுக் கிரங்கிய முருகனும் இடும்பனை உயிர் பெற்றெழச் செய்தார்.

இடும்பன், தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போல காவடி எடுத்து வரும் அடியார் களுக்கு அருளும்படியும் கேட்டுக்கொண்டான். இக்கதையுடன் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுவர்.

இதுவே பழனி மலை வந்த வரலாறு.
.

சாதாரணமாகக் கோவில்களில் மூலவர் சிலைகள் கருங்கல்லில் செய்யப்பட்டவையாகவே இருக்கும்.ஆனால் பழனி ஆண்டவன் சிலை நவபாஷாணத்தில் செய்யப்பட்டது.சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட ஒன்பது பாஷாணங்களும் மருந்தாக மாறி விடுகின்றன.

இந்தச் சிலையைச் செய்தவர் போகர் என்னும் சித்தர் என்று சொல்லப்படுகிறது.அவர் மூன்று சிலைகள் செய்ததாகவும் இரண்டு சிலைகளை கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் எங்கோ ஒளித்து வைத்திருப்பதாகவும் சொல்வார்கள்.இந்த நவ பாஷாணம் பற்றிப் போகர் சொல்கிறார்.....

“பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம் கச்சால் வெள்ளை பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு”.....

காலப்போக்கில் சிலையின் கீழ்ப்பகுதி சிறுத்துப்போய்விட்டது.குறிப்பாகக் கால்கள்,குச்சி போல் ஆகி விட்டன.

இதற்கான ஒரு காரணம்  எனக் கூறப்படுவது பல நூறு ஆண்டுகளாக அபிஷேகம் செய்த தனால் நவ பாஷாணம் கரைந்து விட்டது.

இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

பழனியில் சித்த வைத்தியர் பலர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் சிலை அருகில் செல்லக்கூடிய அனுமதி உள்ளவர்களுக்கும்  தொடர்பு உண்டு;அவர்கள் மூலம் சிலை சுரண்டப்பட்டு,வைத்தியர்களை அடைந்து மருந்தில் உபயோகப் படுத்தப்பட்டு விட்டது என்றும் சொல்வர்.

பழனி முருகன் ஞானத்தைப் பிரதி பலிக்கிறார்.

பழனி என்று சொன்னதும் நினைவுக்கு வரும் ஒரு இனிமையான விஷயம்-பஞ்சாமிர்தம்!


கந்தசாமியே எங்கள் சொந்த சாமியே!


Tuesday, December 4, 2012

குரு என்னும் ஒருவர்!




ஆசிரியரும் குருவும் ஒன்றா?

எல்லா குருவும் ஆசிரியர்தான்.

ஆனால் எல்லா ஆசிரியரும் குரு அல்ல!

குருவுக்கும் ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு?

இதோ---

ஆசிரியர்                                                                           குரு    
------------                                                                         -----------
1)ஆசிரியர் உங்கள் வளர்ச்சிக்குப்                                குரு உங்கள் வளர்ச்சிக்கு
பொறுப்பேற்கிறார்                                                         உங்களையே பொறுப்பேற்க வைக்கிறார்


2)உங்களிடம் இல்லாத,உங்களுக்குத்                         உங்களிடம் உள்ள உங்களுக்குத்
தேவையானவற்றைத் தருகிறார்.                                 தேவையற்றவற்றை நீக்குகிறார்.


3)உங்கள் கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்            உங்கள் விடைகளுக்குக் கேள்வி
                                                                                           கேட்கிறார்

4)ஆசிரியர் மாணவனுக்கு பிள்ளைக்குத்                     குரு மாணவனுக்கு,பிள்ளைக்குத்
     தந்தை போன்றவர்                                                       தாய் போன்றவர்


                                                                                  

5)ஆசிரியர் குழப்பங்களிலிருந்து வெளி வர                 குரு குழப்பங்களையே வேரறுக்கிறார்
   உதவுகிறார்


6)ஆசிரியர் உங்கள் அறிவைக்                                        குரு உங்கள் அறிவை விரிவு 
  கூர்மைப் படுத்துகிறார்.                                                 படுத்துகிறார்


7)ஒருவர் எப்போது வேண்டுமென்றாலும்                    குரு உங்களைத் தேடி ஏற்றுக் கொள்ள
  ஒரு ஆசிரியரைக் கண்டு கொள்ளலாம்.                     வேண்டும்

 ஆம் நல்ல குரு கிடைப்பதும் ஒருவரின் தவப்பயன்தான் .

எல்லா குருவும் நல்ல குரு அல்ல.
 
திருமூலர் சொல்கிறார்

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
 குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
 குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
 குருடுங் குருடுங் குழிவிழு மாறே