Monday, February 11, 2013

நள்ளிரவில் ஒரு நங்கை!




அந்த மகிழ்வுந்து,நெடுஞ்சாலையில் ,விரைவாகச் சென்று கொண்டிருந்தது.சாலையில் விழும் தலை விளக்கின் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சம் இன்றி சாலை இருட்டாக இருந்தது. மகிழ்வுந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்த சரவணன்,தன் கைக்கடிகாரத்தைப்  பார்த்தான் 

.மணி 12ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.சென்ற இடத்தில் எதிர்பார்த்ததை விட நேரம் அதிகமாகி விட்டது.கைபேசியில் கலாவை அழைத்துத் தாமதமாக வருவேன் என்று சொல்லி விட்டான். இருந்தாலும் சீக்கிரம் செல்ல வேண்டும். மகிழ்வுந்தின் முடுக்குப் பொறியை அழுத்தினான்;உந்து இன்னும் விரைவாகச் சாலையை விழுங்கியவாறு பயணிக்கத் துவங்கியது.

சிறிது தொலைவு சென்றதும்,தலைவிளக்கொளியில் சாலையோரத்தில் ஒரு பெண் நின்று கையை அசைத்து நிறுத்துமாறு சைகை செய்து கொண்டிருந்ததைக் கண்டான்.

சரவணன் அவளருகில் சென்று வண்டியை நிறுத்தினான்;ஆனால்  மகிழ்வுந்தின் இயந் திரத்தை நிறுத்தாமல் கண்ணாடியை இறக்கி அவளைப் பார்த்தான்.அவள் அவனிடம், தான் வந்த வண்டி பழுதடைந்து விட்டதால் அங்கு நிற்பதாகச் சொல்லி தன்னை நகர் வரைக் கொண்டு செல்ல இயலுமா என்று கேட்டாள்.அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண்ணை அங்கு தனியாக விட்டுச் செல்வது சரியல்ல என்றுணர்ந்த சரவணன் அவளை வண்டியில் ஏற்றிக் கொண்டான்.மகிழ்வுந்து விரைந்தது.

வண்டியில் ஏறியது முதல் அவள் எதுவும் பேசவில்லை;சரவணனின் கேள்விகளுக்கும் ஒரே சொல்லில் பதிலளித்து வந்தாள்.நகரின் எல்லையை நெருங்கியதும் அவனை நிறுத்தச் சொல்லி இறங்கியவள்,தலையை உள்ளே நுழைத்து நன்றி எனச் சொல்லி விட்டு அதே நேரத்தில் அவன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இழுத்து அறுத்துக் கொண்டு வேகமாக இருட்டில் ஓடி மறைந்தாள்.அவன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு இறங்கித் தேடுவதற்குள் அவள் காணாமல் போயிருந்தாள்.

சரவணன் காவல்  கட்டுப்பாட்டு அறையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைச் சொல்லி முறையீடு பதிவு செய்தான்.காவலர்கள் அங்கு வந்து சுற்று வட்டாரத்தில் தேடிப் பார்த்தனர்.பயனில்லை. சரவணன் வீடு சென்றான்.

மறுநாள் வேறு சிலரோடு பேசும்போது அவனுக்குத் தெரிய வந்தது அந்தப்பகுதியில் முன்பே அது போன்ற நிகழ்ச்சிகள் நடந்திருப்பதாக.

அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.மறுநாள் இரவு வேறு ஒரு மகிழ்வுந்தை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் அதே பகுதியில் பயணித்தான்;முதல் நாள் போலவே அந்தப் பெண்ணைக் கண்டான். அதே கதை!மகிழ்வுந்தில் ஏற்றிக் கொண்டான்.கதவைத் திறக்க இயலாமல் பூட்டிவிட்டான் .காவல் நிலையத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.நிலையத்தை நெருங்கும்போதே கைபேசியில்  தகவலையும் சொல்லி விட்டான். வண்டி காவல் நிலையத்தை அடைந்ததும் காவலர்கள் சுற்றி வளைத்துக் கொள்ள அந்தப் பெண் பிடிபட்டாள்.

காவல் நிலையத்துக்குள் அவளை இழுத்துச் சென்று விசாரிக்கும்போது தெரிய வந்தது.........
 ............
............

அது பெண் அல்ல பெண் வேடம் தரித்த ஆண் !

அவன் தான் அது வரை செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டான்!


(செய்தி:டைம்ஸ் ஆஃப் இந்தியா  09-02-2013 )




.

11 comments:

  1. தினத்தாட்களில் வரும் செய்திகளை சுவைபட கதைபோல் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களேதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இப்படியும் இருப்பார்களா ?

    இரவில் உதவி என்று கேட்பவர்களுக்கும் உதவ யோசிக்க வேண்டும் போல.

    ReplyDelete
  3. செம கில்லாடிகள் ... உசாராத்தான் இருக்கணும்

    ReplyDelete
  4. இது போல் நதந்துக்குறவங்களாலதான் நிஜமாவே பாதிக்க படுறவங்களுக்கு உதவி கிடைக்க மாட்டேங்குது

    ReplyDelete
  5. ஆரம்பத்தில் கதைதான் எழுதுகிறீர்கள் என நினைத்துப் படித்தேன்.
    கொள்ளைகள் .....பலவிதம்..

    ReplyDelete
  6. கதை வடிவில் உண்மை சம்பவம்! சுவையான பதிவு! நன்றி

    ReplyDelete