மன நல மருத்துவர் முன்
அமர்ந்திருக்கிறார் குட்டன்.
”சொல்லுங்க” என்கிறார் ம ந ம.
”எனக்கு நாலைந்து நாளா ஒரு பிரச்சினை”
”பிரச்சினை இருக்கறதுனாலதானே வந்துரிக்கீங்க!என்ன
பிரச்சினை?”
”1 ஆம்தேதி தமிழ் வலைப்பதிவர் திருவிழா
நடக்க இருக்கிறது”
“ஆமாம்!நண்பர் ருத்திரன் கூடச்
சொல்லிகொண்டிருந்தார்.திருவிழாதான் உங்க பிரச்சினையா?!”
”இல்ல டாக்டர்.தினம் ஒரே கனவு வந்து
என்னை இம்சிக்குது. ”
”கனவா?திருவிழா சம்பந்தமான கனவா?
“ஆமாம் டாக்டர்”
“என்ன கனவு சொல்லுங்க”
”கனவில திருவிழா போவதற்காக நான் ரொம்ப
ஆவலுடன் இருக்கிறேன்.நான் போய் என்னை அறிமுகம் செய்து கொண்டதும் பல பதிவர்கள்
என்னைச் சூழ்ந்துக்குவாங்க.
வெகுவாகப் பாராட்டுவாங்க என்றெல்லாம் பல
எதிர்பார்ப்புகள்.நல்லா டிரஸ் பண்ணிக் கிட்டுப் போகிறேன்.”
“நல்லாத்தானே போயிட்டிருக்கு”டாக்டர் ஜோக்கடிக்கிறார்
“இனிமேதான் பிரச்சினையே!நான் போய்
அரங்குக்குள் நுழைகிறேன்.வாசலில் இருவர் அமர்ந்து வருகைப்பதிவு செய்து
கொண்டிருக்கின்றனர்.நானும் எனக்கு முன் வந்த மூவருக்குப் பின் காத்துக் மொண்டிருக்கிறேன்.அவர்கள்
பேசிக்கொள்வதிலிருந்து பதிவு செய்யும் அவர்கள்
இருவரும் சீனு,ரூபக் ராம் என்று அறிகிறேன்.எனக்கு மிக மகிழ்ச்சி.அதற்குக் காரணம்
பின்னர் சொல்கிறேன்.என் முறை வருகிறது”
”பெருமையாகச் சொல்கிறேன்வலைப்பூவின்
பெயர் “குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்”என் பெயர் குட்டன்.அவர்கள் இருவரும்
பரபரப்பாகி என்னை வரவேற்பார்கள் என்ற அல்ப ஆசை!ஆனால் அவர்கள் சர்வ சாதாரணமாக
விவரங்களை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டையைக் கொடுக்கின்றனர்.”
”எனக்குப் பெருத்த ஏமாற்றம்.ஏன் தெரியுமா
டாக்டர்?இவர்கள் இருவருமே என் ரசிகர்கள் என்று சொன்னவர்கள்.”
“நேரில் சொன்னார்களா?
”இல்லை டாக்டர் பின்னூட்டத்தில் சொன்னார்கள்.என்னை
எதிர்பார்ப்பதாகவும் சொன்னவர்கள்”
“என்ன சார் நீங்க?ஒரு வருசத்துக்கு மேலா
வலைப்பூ நடத்துறீங்க.இது கூடத் தெரியலையே. பின்னூட்டத்தில சொல்றதெல்லாமே உண்மைன்னு
நம்புறீங்க.உங்களுக்குத்தான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் குடுக்கணும்.அதெல்லாம் ஒரு
பின்னூட்ட நாகரிகம். அவ்வளவுதான். இதெல்லாம் ரொடீன்.சில பேர் ரைட்டு,ஓகேன்னுவாங்க
சிலர்’ ம்’ ன்னு ஒரு முக்கு முக்குவாங்க.அது போலத்தான்!”
குட்டன் மிரளா மிரள விழிக்கிறார்.
டாக்டர் தொடர்கிறார்”உங்க ஆழ் மனசுல இப்படிப்
பட்ட எண்ணம் ஊன்றிப்போச்சு.நீங்க திருவிழாவுக்குப்
போய் அங்கே உங்களை யாரும் கண்டுக்கலைன்னா,அது மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும்;பிரச்சினை
பெரிசாகி விடும்.”
”அப்ப என்ன செய்யலாம் டாக்டர்”
”ஒரே ஒரு வழிதான்”
”என்ன ?”
“திருவிழாவுக்குப் போகாதீங்க?!”
டாக்டர் அறிவுரைப்படிக் குட்டன் திருவிழாவுக்குப்
போவதில்லை என முடிவெடுக்கிறார்!