Tuesday, June 30, 2015

பணம் என்னும் மதம்!



என்ன வடிவேலு அண்ணே !நல்லாருக்கீங்களா?

வாப்பா லோகநாதா! என்ன விசயம் இவ்வளவு தூரம்?

நம்ம கந்தசாமி ஐயா வீட்டுக்குப் போயிருந்தேன்.அவருக்கு எழுபது வயசாகுதில்ல!வாழ்த்துச் சொல்லப் போயிருந்தேன்.வீடு ஜே ஜே ன்னு இருக்குது.அவரோட மகள்கள்,மகன்.,மருமகள்  மருமகன்கள் பேரன் பேத்திகள் எல்லாம் வந்திருக்காங்க

அப்படியா?

அவர் உண்ன்மையிலே முற்போக்கான ஆளுதான் அண்ணே!ஒரு குட்டி இந்தியாவே இருக்கிதில்ல வீட்டில?முதல் மருமகன்கிறித்தவர்;இரண்டாவது முஸ்லீம்.ஆனா எல்லாரையும் ஏத்துகிட்டாரே,பெரியமனுசன்தான் அண்ணே!

என்னண்ணே சிரிக்கிறீங்க? நான் சொன்னது சரிதானே.

லோகநாதா.உனக்கு முழு விசயமும் தெரியாது.முதல் பொண்ணு கிறித்தவப்பையனைக் காதலிச்சா..கட்டிக்கிட அப்பாகிட்ட அனுமதி கேட்டா.அவர் மறுத்திட்டாரு.அதுக்குப் பொறகுதான் அந்தப் பெண் அதே பையனைக் கல்யாணம் பண்ணிகிடுச்சு.வீட்டூக்கே வராதேன்னு சொல்லி விரட்டி விட்டுட்டார்.

அப்புறம்?

ரெண்டாவது பெண்  முஸ்லிம் பையனைக் காதலிச்சது.அப்பாகிட்ட சொன்னா அனுமதிக்க மாட்டார்னு சொல்லாம போய்க் கல்யாணம் பண்ணிக்கிடுச்சு.கல்யாணத்துக்கு மொத நாளே மதமும் மாறிடுச்சு.பிறகு அப்ப கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்திச்சு.அவரும் ஏத்துக்கிட்டாரு.
அப்படியாண்ணே

அப்புறம்தான் சின்னப் பொண்ணு விசயத்தில விட்டுக் கொடுத்துட்டு பெரிய பெண்ணைத் தள்ளி வைக்கிறதைப் பத்தி ஊரெல்லாம் ஒரு மாதிரிப் பேசுவாங்களேன்னு அவங்களையும் ஏத்துக்கிட்டார்”

ஏண்ணே இந்தப் பாரபட்சம்?

லோகநாதா! அவருக்கு மதம் பத்தியெல்லாம் கவலை இல்லை.முதல் மருமகன் வசதி இல்லாதவன்.இரண்டாவது பெரிய பணக்காரன்!

அவருக்குப் பணம்தான் மதம்!

Monday, June 29, 2015

சாந்தியும் சமாதானமும்!



கோடைவிடுமுறைக்குப் பின் அன்றுதான் பள்ளி திறந்திருந்தது.
மாலை பள்ளியிலிருந்து திரும்பிய சாந்தி,புத்தகப் பையை எறிந்து விட்டு அம்மாவிடம் வந்து ஆர்வமாகப் பேசலானாள்,
“அம்மா!இன்னிக்கு என் வகுப்பில்,ஒரு புதுப் பெண் சேர்ந்திருக்கா.அவ பேரை இது வரைக்கும் நான் கேட்தே இல்லை.சமாதானம் தான் அவ பேரு. நீ கேள்விப்பட்டிருக்கயா?”
ஓ!கிறித்தவப் பெண்ணாக இருப்பாள்.அவர்கள்தான் அப்படிப் பெயர் வைப்பார்கள்”என்றாள் அம்மா.
சாந்தி  கேட்டாள்”என் வகுப்பில் இருக்கும் எஸ்தர் பொட்டு வைப்பதில்லை.இவள் வைத்திருக்கிறாளே?”
கத்தோலிக்கராக இருப்பாள்.அவர்கள் பொட்டு வைப்பதுண்டு” இது அம்மாவின் பதில்
“கெட்டிக்காரியாக இருக்கிறாள் அம்மா.ரொம்ப நல்லவளும் கூட.என் அருகில்தான் அவளுக்கு இருக்கை.அன்பாகப் பேசுகிறாள்.அவள் கொண்டு வந்த கேக்கை எனக்கும் கொடுத்தாள்”சாந்தி
”பெயருக்கு  ஏற்றபடி இருக்கிறாள் போலும். நீயும் அது போலத்தான் இருக்க வேண்டும்.
இன்று நம் வீட்டில் செய்த முறுக்கை நாளை அவளுக்குக் கொண்டு போய்க் கொடு.”
அம்மா தொடர்ந்தாள்”உன் பெயர் சாந்தி .சாந்தி என்றால் அமைதி இல்லியா? ஆங்கிலத்தில் பீஸ் என்ற வார்த்தைக்கு அமைதி ,சமாதானம் என்ற இரு பொருளும் உண்டு.எனவே 
உன் பெயரும் அவள் பெயரும் ஒன்றுதான்”
”இதையே வேறு விதமாகவும் சொல்லலாம்.உலகில் சண்டை இன்றி இருந்தால்தான் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.அதாவது சமாதானம் இருந்தால்தான் சாந்தி நிலவும்.சாந்தி இருந்தால்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும்.எனவே சாந்தியும் சமாதானமும் மிக அவசியம்.”
”ஆமாம் அம்மா.என் வகுப்பு உவைஸ் கூடச் சொல்லியிருக்கான்,அவர்கள் ஒருவரை ஒருவர்  சந்திக்கும்போது சாந்தியும் சமாதானமும் நிலவுக  என்று கூறிக்கொள்வார்கள் என்று .” சாந்தி சொன்னாள்

”உங்கள் வகுப்பில் அனைவருடனும் பிரியத்துடன் சண்டைகளின்றிப் பழக வேண்டும்
 நீங்கள் இருவரும் என்றும் சேர்ந்தே இருந்து நன்கு படித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.
ஒரு நாள் அவளை நம் வீட்டுக்கு அழைத்து வா”
அம்மா சாந்தியை அணைத்துக் கொண்டாள்

Wednesday, April 29, 2015

இளைஞர்களுக்காக,இளைஞரால்.... இத்யாதி இத்யாதி!



ஹலோ!யாரு குட்டனா? பழையபடியும் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போல!”
ஏன்,எழுதக்கூடாதா?”
அப்படி இல்ல .நீங்க கட்டாயம் தொடர்ந்து எழுதணும்.எங்களை மாதிரி இளைஞர்களுக்காக வலைப்பூ  நடத்தும் இளைஞர் நீங்க தொடர்ந்து எழுதணும்.அதுதான் எங்க ஆசை
ரொம்ப நன்றிங்க
இது போல் நேற்று முதல் பத்துக் கால்கள்.
எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி?
ஹூம்!
இப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் .
ஆனால் நடக்கவில்லையே!
நானே ஏதாவது இப்படி நினைத்துப் பார்த்தால்தான் உண்டு!
ஒரு ஆறு பேரைத்தவிர யாரும் ஒண்ணும் சொல்லவில்லை.
எட்டிப்பாத்தவங்களே மொத்தம் 117 பேர்தான் இது வரை.
இதுக்காக எல்லாம் எழுதாம இருந்துவிடுவேனா என்ன?
எழுதத்தான் போகிறேன்.
இளைஞர்களுக்காக,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ!
இதை ஏன் சொல்ல வேண்டும்?
எல்லோருக்கும் தெரியும் இது ’இளைஞர்களுக்கான’ வலைப்பூ என்று
எனவே அதை நீக்கி விடலாம்.
நான் இளஞன் என்பதை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
எனவே இளைஞரால் என்பதை நீக்கி விடலாம்.
பதிவின் எழுத்தே சொல்லும் இது இளைஞர் வலைப்பூ என்று.
எனவே இளைஞர் என்பதை நீக்கி விடலாம்.
கடைசியில் வலைப்பூ!
இது வலைப்பூ இல்லாமல் வேறு என்ன?
எனவே அதையும் நீக்கி விடலாம்.
மிஞ்சியிருப்பது.....ஒன்றுமில்லை!
அதுதான் இந்த வலைப்பூ!!
டிஸ்கி:இப்போதுதான் கவனித்தேன்.சென்ற பதிவுடன் ட்ரிபிள் செஞ்சுரி அடிச்சுட்டேன்!
ஆதரவுக்கு(!) நன்றி!


Tuesday, April 28, 2015

ஹையோ ஹையோ!

தந்தை தன் ஐந்து வயதுப் பெண்ணுக்குக் கதை சொல்லி விட்டு,அவளைப் பிரார்த்தனை செய்தபின் தூங்கச் சொன்னார்.

அவள் பிரார்த்தனை முடிவில்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவைக் காப்பாற் றட்டும்; பாட்டியைக் காப்பாற்றட்டும்;தாத்தாவை வரவேற்கட்டும்”என்றாள் .

தந்தை ஏன் அவ்வாறு சொல்கிறாய் எனக்கேட்க,என்னவோ சொல்ல வேண்டும் எனத் தோன்றியது என்றாள்.

மறுநாள் தாத்தா இறந்து போனார்

சில மாதங்களுக்குப்பின் ஓர் இரவு பிரார்த்தனைக்குப் பின்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவைக் காப்பாற்றட்டும்;பாட்டியை வரவேற்கட்டும்”என்றாள்

மறுநள் பாட்டி இறந்துபோனாள்

அப்பா எண்ணினார் இவளிடம் அபூர்வ சக்தி இருக்கிறது

நாட்கள் நகர்ந்தன.

ஓர் இரவில் அவள் பிரார்த்தித்தாள்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவை வரவேற்கட்டும்”

தந்தைக்கு தூக்கி வாரிப் போட்டது.

அப்படியானால் மறுநாள் தான் சாகப்போகிறோமா?

காலை மிகச் சீக்கிரமே அலுவலகம் சென்று விட்டார்

அன்று அச்சத்துடனே செயல் பட்டார்.

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை.


நெஞ்சை அடைப்பது போல் இருந்தது

தண்ணீர் குடித்தார்.

காய்ச்சல் வருவது போல் இருந்தது

மாத்திரை போட்டுக் கொண்டார்

எப்படியாவது நள்ளிரவு கடந்து விட்டால் போதும்

அதுவரை அலுவலகத்திலேயே இருந்து விட முடிவு செய்தார்.

அன்றைய பொழுது நரக வேதனைதான்.

நள்ளிரவு கடந்தது.

ஒரு நிம்மதி மூச்சு விட்டுப் பின் வீடு திரும்பினார்.

மனைவி கேட்டாள் ”வேலை மிக அதிகமா/”

அவர் சொன்னார்”என் வாழ்க்கையிலேயெ இது போன்ற மோசமான நாள் இருந்ததில்லை.”

மனைவி சொன்னாள்”எனக்கு மட்டும் என்ன?இங்கே ஒரே பிரச்சினை.தபால் கொடுக்க வந்த தபால்காரர் மாரடைப்பில் நம் வீட்டுப் படியிலேயே இறந்து விட்டார்!”

Wednesday, December 10, 2014

மருத்துவம் செய்யும் கணினி!



ராமுவுக்கு ஒருநாள் பயங்கரத் தலைவலி. நண்பன் சோமுவிடம் சொன்னான்எனக்குத் தலைவலி மண்டையைப் பிளக்கிறது.மருத்துவரைப் பார்க்கப்போகிறேன்.”

உடனே சோமு சொன்னான்அநாவசியமாக மருத்துவருக்குச் செலவழிக்காதே..மருந்துக் கடையில் ஒரு கணினி இருக்கிறது.அதனிடம் உன் சிறுநீரின் மாதிரி கொடுத்தால் அது கண்டுபிடித்துச் சொல்லி விடும் பிரச்சினை என்ன  என்றும் அதன்காரணத்தையும் என்ன செய்ய வேண்டும் என்பதையும்.20 ரூபாய்தான் செலவு.’

ராமு சிறுநீரை ஒரு குப்பியில் எடுத்துக் கொண்டு கனினியிடம் போய் சிறுநீரை ஊற்றிவிட்டுப் பணத்தையும் செலுத்தினான்.கணினி கடாமுடா எனச் சப்தங்கள் எழுப்பியது.சில பல விளக்குகள் ஒளிர்ந்தன.கடைசியில் ஒரு சீட்டு வெளியே வந்து விழுந்தது.அதில் எழுதியிருந்தது” உனக்கு ஒற்றைத் தலைவலி.அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.அதிக மன அழுத்தம்,சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெயிலில் போகக்கூடாது.ஒரு வாரம் கழித்து மீண்டும் வா”

அவன் ஆச்சரியப்பட்டான்.ஆனால் ஒரு வாரம் கழித்து வரும்போது அதைச் சோதித்துப் பார்த்த் விடுவது என முடிவு செய்தான்.

ஒரு வாரம் கழித்துக் கொஞ்சம் குழாய்த்தண்ணீர்,தன் நாயின் மலம்,தன் மனைவி மகள் இவர்களின் சிறுநீர் எல்லாம் கலந்து கொண்டுபோய் கணினியில் கொட்டி பணத்தை கட்டினான்.முன்பு போலவே,கட முட சப்தம் விளக்குகளுக்குப் பின் கனினி ஒரு சீட்டைத் துப்பியது.

அதில் எழுதியிருந்தது---

“உன் குழாய் நீரில் சாக்கடை கலந்திருக்கிறது.

உன் நாய் வயிற்றில் பூச்சி இருக்கிறது.

16 வயதான உன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள்

ஆறு மாதமாக உன் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாள்.

இவ்வளவு பிரச்சினை இருந்தால் எப்படித் தலைவலி வராமல் இருக்கும்?”

Thursday, October 23, 2014

கத்தி...ஒரு பார்வை




பல தினங்களாகவே கத்தி பற்றி ஊடகங்களில் வெகுவாகப் பேசப்பட்டு வருகிறது. கத்திக்காயம் பட்டால் டாக்டரிடம்தானே(!) போக வேண்டும்?!கத்தியால் காயம் படுவது என்பது வேறு;கத்திக் கத்தியே காயம் படுவது என்பது வேறு.இந்த பரபரப்பான சூழலில் கத்தி பற்றிய என் பார்வை…….