Tuesday, September 4, 2012

வாய்ச் சொற்கள் என்ன பயனுமில!



சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு கலை.இதிலே  இரண்டு பகுதிகள் இருக்கிறன. ஒன்று,சுருங்கச் சொல்லல்;இரண்டு,விளங்க வைத்தல்.

எல்லோராலும் சுருங்கச் சொல்லி விட முடியும்;ஆனால் சொன்னது கேட்பவர்க்கு விளங்க வேண்டுமே!சொல்ல வேண்டிய கருத்தை,எந்த விதமான சுற்றி வளைத்தலும் இல்லாமல், அதேசமயம் முழுமையாக,மனத்தில் படும்படி, புரியும்படிச்   சொல்ல வேண்டும்.

இக்கலையில் வல்லவன்,சொல்லின் செல்வனாம் அனுமன்.

அக்காலத்திரைப் படங்களில் உணர்ச்சி மயமான காட்சிகளில் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். அது ஒரு நாடக உத்தியே.

”மாசற்ற ஜோதி மழையே,பெண்ணிற் பெரும்பொருளே,பேரழகின் பிறப்பிடமே,காதலுக்கோர் எடுத்துக்காட்டே,கவிஞர்களும் புகழ்ந்திட இயலா கற்பனை ஆரமே..,சிரித்துச் செழித்த உன் சிங்கார முகத்தை,எரித்துக் கெடுக்க வேண்டாமென்று கல்கொட்டி மூடினரோ,கல்லினும் கொடிய மனமுடையோர்” என்ற சலீமின் புலம்பல் சோகத்தின் உச்சத்தைக்காட்டும். அதிலும் ஒரு சுவை இருந்தது

ஆனால் திரைப்படம் என்ற காட்சி ஊடகத்தில் அது தேவையா?எல்லையற்ற சோகத்தை,ஒரு முக பாவத்தால்,உடல் மொழியால்,கையசைவால் அல்லது சில வார்த்தைகள் மூலம் சொல்லி விட முடியும்.,

இன்றைய வசனகர்த்தாக்கள்,இயக்குநர்கள் சொல்லின் செல்வர்களாகி விட்டார்கள்.  

குறிப்பாக மணிரத்தினம் .

தளபதி படத்தில்  ஒரு காட்சி.கைது செய்யப்பட்ட கதாநாயகனை போலீஸார் விடுதலை செய்வார்கள், வேறு ஒருவன் அக்குற்றத்தைத் தான் செய்ததாக ஒப்புக் கொண்டு விட்டான் என்று.அப்போதுபேசப்படும் வசனம்.---

//கதாநாயகன்(அந்த நபரைப் பார்த்து)-ஏன்

அவர்:தேவா!//

சொல்ல வேண்டியதை,என்ன நடந்தது என்பதை இதை விடச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

பாலு மகேந்திரா சொல்வார்திரைப்படம் ஒரு காட்சி ஊடகம்(cinema is a visual medium).
உண்மைதான்.

பக்கம் பக்கமாகப் பேசும் வசனத்திலும் ஒரு சுவை இருந்தது.வசனம் என்றாலே அதற்குப் பொருளே நடிகர் திலகம்தான் என்னுமளவுக்கு வசனங்களுக்கு அவர் உயிர் கொடுப்பார்.

சுருக்கமான மொழிகளில்,காட்சியமைப்புகளில் புரிய வைப்பதிலும் ஒரு சுவை இருக்கிறது.

இன்றைய கால கட்டத்தில் திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதை புரிந்து கொண்டு விட்ட நிலையில், நீண்ட வசனங்கள் தேவையற்றவையாகி விட்டன.

ஆயினும் சிவாஜியின் பழைய படங்களைப் பார்க்கையில்,அந்த வசனங்களைக் கேட்கையில் உடல் சிலிர்த்துத்தான் போகிறது!

6 comments:

  1. நடிகர் திலகத்தை சொல்லவா வேண்டும்...?

    ஒவ்வொரு அசைவும் பேசுமே...

    இப்போது உள்ள நடிகர்களும் முயற்சி செய்கிறார்கள்... (கமல் உட்பட)

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு சிவாஜிதான்!
      நன்றி

      Delete

  2. இன்றைய கால கட்டத்தில் திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் என்பதை புரிந்து கொண்டு விட்ட நிலையில், நீண்ட வசனங்கள் தேவையற்றவையாகி விட்டன.//

    மிகச் சரி ஆயினும் அந்த ரசனைக்கு இன்னும்
    பெரும்பாலானோர் மாறாத காரணத்தால்தான்
    இன்னும் பழைய நிலை தமிழ் திரையுலகம்
    தொடர்கிறது என நினைக்கிறேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள்,
      நன்றி.

      Delete
  3. பழைய படங்கள் இப்போதெல்லாம் நிறைய பேருக்குப் பிடிப்பதில்லை...

    சில படங்கள் நான் இப்போதும் பார்த்து ரசிப்பதுண்டு. :))

    ReplyDelete