Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Thursday, May 30, 2013

அம்மா என்றழைக்காத உயிரில்லையே.........





 படத்துக்கான கவிதை
--------------------------------

அம்மா!

உன்னை நான் பார்த்ததில்லை.

நீ யாரோ எனக்குத் தெரியாது.

என்ன காரணத்தால் என்னை உதறிச் சென்றாய்

எனக்குத் தெரியாது.

எனக்கு நீ பெயர் சூட்டவில்லை

ஆனால் பட்டம் கொடுத்துச் சென்றாய்

அநாதையென்று!

அம்மாவின் அணைப்பில்

அம்மாவின் கைபிடித்து நடந்து

அம்மாவின் மடியில் உறங்கும்

குழந்தைகளைப் பார்ப்பேன்!

எனக்கு அந்தச் சுகம் மறுக்கப்பட்டது.

என்ன செய்ய?

உன் மடியில் நான் உறங்க

வேறென்ன செய்ய,இதைத்தவிர!

அம்மா,அம்மா,அம்மா…………







                                                                                                                                                                              








Friday, May 24, 2013

நாம் குழந்தையாகவே இருந்து விடக் கூடாதா?!



விடுமுறைநாள்.

காலைநேரம்.

கடைக்குப்புறப்பட்டேன் ---கறியும் மளிகையும் வாங்க.

என் செல்ல மகளும் உடன் வர விரும்பினாள்

மனைவி அவளுக்கு ஆதரவு.

அழைத்துச் சென்றேன்.

செல்லும் வழியெல்லாம் கேள்விகள்.

கறிக்கடையில் கேட்டாள்”அப்பா! போன வாரம் என் விரலில் பிளேடு லேசாக அறுத்து ரத்தம் வந்தது;வலித்து அழுதேன்.ஆடுகளை வெட்டினால் அவற்றுக்கு வலிக்காதா?”

என்ன பதில் சொல்ல?

இந்த மாதிரி யோசித்தால் நான் மரக்கறி உண்பவனாக மாற வேண்டியதுதான்.

அங்கிருந்து சில சாமன்கள் வாங்க சூப்பர் மார்க்கெட்.

மசாலா சாமான்கள் வாங்கியாச்சு.

“அப்பா,ஓரியோ!”

ஒரு பாக்கட் எடுக்கிறேன்

“ரெண்டு பாக்கட்டுப்பா”

வாங்கிக் கொள்கிறேன்.வீடு திரும்பும் வழியில் சாலையோரத்தில் ஒரு பெண் நுங்கு விற்றுக் கொண்டிருக்கிறாள்.

அவளிடம் நுங்கு வாங்குகிறேன்.

அருகில் இருக்கும் அவள் குழந்தை அழுது கொண்டிருக்கிறது.

பசியோ?

என் மகள் கேட்கிறாள்”அப்பா,அவனுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் கொடுக்கலாமா?”

“என்னம்மா?உனக்கு வேணும்னு வாங்கினாயே?”கேட்கிறேன்

”அதான் ரெண்டு பாக்கெட் இருக்கேப்பா”

என் மண்டையில் அடித்தது போன்ற பதில்.

எனக்குத் தோன்றவில்லையே அது!

விரும்பி வாங்கிய ஒன்று கூட தேவைக்கு அதிகம் இருப்பதால் கொடுக்க எண்ணும் மனசு!

குழந்தைக்கு இருக்கிறது.

பெரியவனான எனக்கு இல்லை

பெரியவர்களாக ஆக ஆக,வயது முதிர்ச்சியோடு அறிவும் முதிர்கிறது—உண்மைதான்

ஆனால் பண்பு ,இரக்கம் எல்லாம் குறைந்து விடுகிறது.

நான் ,எனது,எனக்கு என்ற எண்ணம் வளர்ந்து விடுகிறது.

என்ன செய்ய?

நாம் குழந்தையாகவே இருந்து விடக் கூடாதா?

……………………………………………
சமீபத்தில் படித்த ஒரு கருத்தை என் எழுத்தில் தந்திருக்கிறேன்