Tuesday, April 30, 2013

அவள் உணரவில்லை,அவள் அழகியென்பதை!



அவள் உணரவில்லை அவள் அழகியென்பதை!
அவள் நடக்கும் விதத்தில் ,அவள் இனிய பேச்சில்,
சிரிக்கையில் சற்றே தலை சாய்க்கும் பாணியில்
அவள் உணரவில்லை அவள் அழகியென்பதை!

அவள் அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல
உளம் சார்ந்ததுமாகும்
இதயத்தில் அன்பும் ,கண்களில் கருணையும்
சொல்லில் பரிவும் ,செயலில் கனிவும்
அவள் உணரவில்லை அவள் அழகியென்பதை!

நான் உணர்ந்திருக்கிறேன்;வேறு சிலரும் கூட
கடந்து செல்லும் அவளை,வியந்து பார்ப்பவர்
நம்மை ஈர்க்கிறது என்று சொல்லத்தெரியாமல்!

நீ ஒரு பேரழகி என உரக்கக் கூவ எண்ணுகிறேன்
அப்போதாவது அவளுக்குப் புரிகிறதா எனப் பார்க்க
அவள் உணரவில்லை அவள் அழகியென்பதை
அவளுக்குத் தெரியவில்லை அவளின் தனித்தன்மை!

உடையில் ஒப்பனையில் அணிகலனில் ஒட்டகமும் அழகுதான்!
அதுவல்ல;உள்ளிருந்து வருவதே உண்மை அழகு!
அவளுக்கு அது புரியவில்லை
அவள் உணரவில்லை அவள் அழகியென்பதை!

உலகையே அவளுக்காகக் கொடுக்க
எனக்காக மட்டுமே அவள் புன்னகைக்க
தன் உள்ளழகை உணர்ந்து அவள் மனம் திறக்க
காத்திருக்கிறேன் நான்!


ஒப்பனை களைந்து அணிகலன் ஏதுமின்றி 
உள்ளத்தழகு முகத்தில் மினுமினுக்க
சுற்றிப்போட்டுக் கொண்ட வளையம் தகர்த்து
வெளியே வருவாயா,உன்னைத் தருவாயா,  
என் அன்பைப் பெறுவாயா அழகியே சொல் !


Saturday, April 27, 2013

உலக அழகி யார்?



உன்னையே உலக அழகியென் றெண்ணினேன்
உன் தங்கையைப் பார்க்கும் வரை!


உன் கண்கள் உன் புன்னகை எல்லாமே அழகுதான்
என்னாலும் பொய் சொல்ல முடியும்!


கனவிலும் உன் முகத்தைக் காண்கிறேன் எனான்  
ி பயந்து எழுகிறேன் நான்!

Friday, April 26, 2013

அவளைத் தழுவும் சுகம்!



அவளைப் பார்க்கிறேன்,ஆசை பெருகுகிறது

அருகில் அவளிருக்கத் தூக்கம் வருமோ!

ஆசையோடு அவளை அள்ளி எடுக்கிறேன்

 மேலாடை நீக்கி என் மடியில் கிடத்துகிறேன்

அவள் வளைவுகளில் என் கைகள்

மெல்லப் படருகின்றன!

என்ன சுகம் என்ன சுகம்!

கைகளும் விரல்களும் போடும் கோலத்தில்

புதிய சுருதி சேர்ந்து

அவள் ஒலியெழுப்புகிறாள் இன்பமாய்

உச்சத்தை நோக்கி.....

காதுகளில் நாத வெள்ளம் நிறைகிறது!

அண்ணா கத்துகிறார்

“பாதி ராத்திரியில் என்னடா

வீணை வாசிப்பு”!!

ரசனையில்லாதவர்!

என்ன செய்ய?நிறுத்தி விட்டேன்!

பயங்கரமான முதலமைச்சர்!


தமிழில் அர்ச்சய பாத்திரம் போல் ஒரு முதல்வர்(நன்றி:- டி.என்.முரளிதரன்)

ஆங்கிலத்தில் பயங்கரமான ஒரு முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் தமிழில்...

ஆந்திராவில் ஆங்கிலத்தில்...

பாருங்கள் போஸ்டரை....

அவர்களைச் சொல்லிக்குற்றமில்லை!

தமிழ்நாட்டில் தமிழிலேயே குழப்பம் என்றால் அந்நிய மொழியாம் ஆங்கிலத்தில் ஆந்திராவில் குழப்பம் வருவது தவறேயில்லை!என்ன...’.மாண்பு மிகு’ என்பது பயங்கரமாகி விட்டது!--(ஒரு ஆர் மிஸ்ஸிங்!)
 

Thursday, April 25, 2013

யார் அறையப்பா இது?!



யார் அறை இது?

இத்தனை அலங்கோலமாய்!

ஒட்டடைகள் அங்கும் இங்கும்

மேசை மீது வட்டமாய்க் காபிக்கறைகள்

கட்டில் மீது காலுறை

நாற்றம் சகிக்கவில்லை.

கதவில் மாட்டிய கலர் போன ஜீன்ஸ்

நாற்காலி மீது அழுக்கு பனியனும் ஜட்டியும்!

சரியாய் மடிக்காத செய்தித்தாள்

நான்கைந்து இறைந்து கிடக்கிறது.

கட்டில் அடியில் அது என்ன!

ஓ!பீர் பாட்டில் இரண்டு!

எவன் அறைடா இது?

சீனு,சுரேஷ் ,செந்தில்?

என்ன சிரிக்கிறீர்கள்?

சரியாய்க் கேட்கவில்லை சொல்லுங்கள்!

என் அறையா!

அப்படியா? அதானே!

பார்த்தது போல் இருக்கிறதே என யோசித்தேன்!