Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Tuesday, June 30, 2015

பணம் என்னும் மதம்!



என்ன வடிவேலு அண்ணே !நல்லாருக்கீங்களா?

வாப்பா லோகநாதா! என்ன விசயம் இவ்வளவு தூரம்?

நம்ம கந்தசாமி ஐயா வீட்டுக்குப் போயிருந்தேன்.அவருக்கு எழுபது வயசாகுதில்ல!வாழ்த்துச் சொல்லப் போயிருந்தேன்.வீடு ஜே ஜே ன்னு இருக்குது.அவரோட மகள்கள்,மகன்.,மருமகள்  மருமகன்கள் பேரன் பேத்திகள் எல்லாம் வந்திருக்காங்க

அப்படியா?

அவர் உண்ன்மையிலே முற்போக்கான ஆளுதான் அண்ணே!ஒரு குட்டி இந்தியாவே இருக்கிதில்ல வீட்டில?முதல் மருமகன்கிறித்தவர்;இரண்டாவது முஸ்லீம்.ஆனா எல்லாரையும் ஏத்துகிட்டாரே,பெரியமனுசன்தான் அண்ணே!

என்னண்ணே சிரிக்கிறீங்க? நான் சொன்னது சரிதானே.

லோகநாதா.உனக்கு முழு விசயமும் தெரியாது.முதல் பொண்ணு கிறித்தவப்பையனைக் காதலிச்சா..கட்டிக்கிட அப்பாகிட்ட அனுமதி கேட்டா.அவர் மறுத்திட்டாரு.அதுக்குப் பொறகுதான் அந்தப் பெண் அதே பையனைக் கல்யாணம் பண்ணிகிடுச்சு.வீட்டூக்கே வராதேன்னு சொல்லி விரட்டி விட்டுட்டார்.

அப்புறம்?

ரெண்டாவது பெண்  முஸ்லிம் பையனைக் காதலிச்சது.அப்பாகிட்ட சொன்னா அனுமதிக்க மாட்டார்னு சொல்லாம போய்க் கல்யாணம் பண்ணிக்கிடுச்சு.கல்யாணத்துக்கு மொத நாளே மதமும் மாறிடுச்சு.பிறகு அப்ப கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்திச்சு.அவரும் ஏத்துக்கிட்டாரு.
அப்படியாண்ணே

அப்புறம்தான் சின்னப் பொண்ணு விசயத்தில விட்டுக் கொடுத்துட்டு பெரிய பெண்ணைத் தள்ளி வைக்கிறதைப் பத்தி ஊரெல்லாம் ஒரு மாதிரிப் பேசுவாங்களேன்னு அவங்களையும் ஏத்துக்கிட்டார்”

ஏண்ணே இந்தப் பாரபட்சம்?

லோகநாதா! அவருக்கு மதம் பத்தியெல்லாம் கவலை இல்லை.முதல் மருமகன் வசதி இல்லாதவன்.இரண்டாவது பெரிய பணக்காரன்!

அவருக்குப் பணம்தான் மதம்!

Monday, June 29, 2015

சாந்தியும் சமாதானமும்!



கோடைவிடுமுறைக்குப் பின் அன்றுதான் பள்ளி திறந்திருந்தது.
மாலை பள்ளியிலிருந்து திரும்பிய சாந்தி,புத்தகப் பையை எறிந்து விட்டு அம்மாவிடம் வந்து ஆர்வமாகப் பேசலானாள்,
“அம்மா!இன்னிக்கு என் வகுப்பில்,ஒரு புதுப் பெண் சேர்ந்திருக்கா.அவ பேரை இது வரைக்கும் நான் கேட்தே இல்லை.சமாதானம் தான் அவ பேரு. நீ கேள்விப்பட்டிருக்கயா?”
ஓ!கிறித்தவப் பெண்ணாக இருப்பாள்.அவர்கள்தான் அப்படிப் பெயர் வைப்பார்கள்”என்றாள் அம்மா.
சாந்தி  கேட்டாள்”என் வகுப்பில் இருக்கும் எஸ்தர் பொட்டு வைப்பதில்லை.இவள் வைத்திருக்கிறாளே?”
கத்தோலிக்கராக இருப்பாள்.அவர்கள் பொட்டு வைப்பதுண்டு” இது அம்மாவின் பதில்
“கெட்டிக்காரியாக இருக்கிறாள் அம்மா.ரொம்ப நல்லவளும் கூட.என் அருகில்தான் அவளுக்கு இருக்கை.அன்பாகப் பேசுகிறாள்.அவள் கொண்டு வந்த கேக்கை எனக்கும் கொடுத்தாள்”சாந்தி
”பெயருக்கு  ஏற்றபடி இருக்கிறாள் போலும். நீயும் அது போலத்தான் இருக்க வேண்டும்.
இன்று நம் வீட்டில் செய்த முறுக்கை நாளை அவளுக்குக் கொண்டு போய்க் கொடு.”
அம்மா தொடர்ந்தாள்”உன் பெயர் சாந்தி .சாந்தி என்றால் அமைதி இல்லியா? ஆங்கிலத்தில் பீஸ் என்ற வார்த்தைக்கு அமைதி ,சமாதானம் என்ற இரு பொருளும் உண்டு.எனவே 
உன் பெயரும் அவள் பெயரும் ஒன்றுதான்”
”இதையே வேறு விதமாகவும் சொல்லலாம்.உலகில் சண்டை இன்றி இருந்தால்தான் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.அதாவது சமாதானம் இருந்தால்தான் சாந்தி நிலவும்.சாந்தி இருந்தால்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும்.எனவே சாந்தியும் சமாதானமும் மிக அவசியம்.”
”ஆமாம் அம்மா.என் வகுப்பு உவைஸ் கூடச் சொல்லியிருக்கான்,அவர்கள் ஒருவரை ஒருவர்  சந்திக்கும்போது சாந்தியும் சமாதானமும் நிலவுக  என்று கூறிக்கொள்வார்கள் என்று .” சாந்தி சொன்னாள்

”உங்கள் வகுப்பில் அனைவருடனும் பிரியத்துடன் சண்டைகளின்றிப் பழக வேண்டும்
 நீங்கள் இருவரும் என்றும் சேர்ந்தே இருந்து நன்கு படித்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.
ஒரு நாள் அவளை நம் வீட்டுக்கு அழைத்து வா”
அம்மா சாந்தியை அணைத்துக் கொண்டாள்

Friday, April 11, 2014

பழம் வேண்டும்;மரம் வேண்டாம்!-2

இந்த உருவகக்கதை, எத்தனையோ குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சி.
பெற்றவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து, பட்டினியிருந்து, போராடி பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருப்பார்கள். வளர்ந்து, கை நிறைய சம்பாதித்துக்கொண்டு, திருமணமானபின், பெற்றவர்கள் பிள்ளைகளின் கண்களுக்கு மிகவும் வேண்டாத அருவருப்பான, உருவங்கள். அவர்கள் அளிக்கின்ற தொல்லையில் மனம் அடிபட்ட நிலையில், பெற்றோர்கள் எங்கோ ஒரு மூலையில்!

Thursday, April 10, 2014

பழம் வேண்டும்;மரம் வேண்டாம்!

மிகவும் இருண்ட ஒரு பகுதி. 

அங்கே சில மனிதப் பிறவிகள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். கிடைப்பதை உண்டு, இருந்த இடத்திலே காலம் கழிப்பவர்கள். வேறு எங்கு செல்லவும் பயம். அப்படியே சென்றாலும் கும்பலாகக் கை கோர்த்தபடி செல்வார்கள். கூச்சல் போட்டு பேசிக் கொள்வார்கள். அவர்கள் கண்களிருந்தும் குருடர்கள்.

Saturday, February 15, 2014

பண்ணையாரும் பத்மினியும்!+ஒரு கிசுகிசு



இந்தச் சினிமாவின் விளம்பரம் முதலில் வந்தவுடன் நான் இது ஏதோ விவகாரமான படம் போல என எண்ணினேன்!பின்னர்தான் தெரிந்தது,பத்மினி என்பது ஒரு பெண்ணை அல்ல, பத்மினி காரை குறிப்பது என்று.

பெண்களைச் சாமுத்திரிகா லக்ஷணப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்தார்கள்---பத்மினி, சித்தினி, சங்கினி,அத்தினி என்று,இதில் பத்மினி என்பது,உத்தமசாதிப் பெண்.இங்கு சாதி என்றால் வருணாச் சிரமம் அல்ல.பெண்மையின் இலக்கணங்கள் எல்லாம் ஒரு சேரப் பொருந்திய  மிகஅழகிய பெண்.

ஆனால் அப்படி ஒரு பெண் மனைவியாக வாய்த்தால் சிரமம்தான்.வடமொழியில் சொல்வார்கள்  ”பார்யா ரூபவதி சத்ரு!”அதாவது அழகான மனைவி ஒரு விரோதி என்பதாகும்.

அழகு என்பது என்ன?அழகிய முகம் .உடல் அமைப்பு இவையெல்லாம் அழகாகி விடுமா? உள்ளத்தழுகும் வேண்டுமல்லவா?ஆனால் பார்க்க அழகில்லாத ஒரு பெண்ணை எந்த               இளைஞன் மந்து கொள்ளச் சம்மதிப்பான்?ஆகவே இரண்டும் சுமாராகவாவது இருக்க வேண்டும்.பத்மினியெல்லாம் வேண்டான்.சித்தினி,சங்கினி போதும்!

வாழ்க்கையில் நாம் போதும் என்று சொல்வது சாப்பிடும்போது மட்டும்தான்.ஏனென்றால் வயிறு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் உண்ண முடியாது.அவ்வையார் சொன்னார்”……….

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய்இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”

உண்மைதான் .வயிறு நிறைந்தவுடன் திருப்தி அடைந்து விடுகிறது.ஆனால் மனதுக்குத் திருப்தி என்பதே  ஏற்படுவதில்லை.வேண்டும் ,வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதுதான் பிரச்சினையே!

இரு நாட்களாக என் வயிறு பசி இல்லாமல் போய் சாப்பாட்டை ஏற்க மறுக்கிறது.ஆனால் மருந்துகளைச் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.வயிறு சரியில்லை என்றால் உடல் வலி தலை வலி என்று எல்லாம் கூடவே வந்து விடுகின்றன!

முதலில் சொன்ன படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.

ஒரு கிசுகிசு---தலைநகரப் புகைப்பட நிபுணரும்,தமிழக மான்செஸ்டர் பேய்ப்பதிவரும்,ஓட்டல் பெயர் பதிவரும்,குடும்பப்பதிவரும்,இன்று  எழுதுவதை நிறுத்தி வனவாசம் இருக்கும் சென்னையைச் சேர்ந்த பைத்தியப்பதிவர் வீட்டில் சந்தித்தார்களாம்!

Thursday, August 29, 2013

தேடிப் பிடிக்கும் என் ஆன்மா!




எனக்குத் திசைகாட்டி தேவையில்லை
      நீ இருக்கும் இடம் தெரிய.
உனது இதயத்தின் துடிப்பொலியே
    என்னை வழி நடத்தும்

இருட்டில் ஒளிந்திருக்கும் உன்னைத்தேட
     எனக்கு வெளிச்சம் தேவையில்லை
உன் முத்துப்பல் ஒளியே போதும்
     உன்னை நான் தேடிப்பிடிக்க!

காற்றின் உதவி தேவையில்லை
     உன்னை கண்டு பிடிக்க
உன் தேன் குரல் ஒலி கிசுகிசுப்பாய்
      என் காதோடு வழிகாட்டும்

நட்சத்திரங்கள் தேவையில்லை
   என்னைக் கூட்டிச் செல்ல
இருளிலும் ஒளிரும் உன் கண்கள்
     என்னை இழுத்துச் செல்லும்!

ஆனால் என் அன்பே!

வழிதவறி என்றேனும் போக நேர்ந்தால்
      நிச்சயம் நான் உயிர் நீப்பேன்.
அப்போது என் ஆன்மா உன்னை
      அடைந்தே தீரும்!


டிஸ்கி:பதிவர் திருவிழா பற்றி நிறைய எழுதியாகி விட்டது.எனவே லைட்டா ஒரு காதல் கவிதை!