வயது-1
பட்டுப்புடவைகள்;வேட்டி பேண்ட் சட்டைகள்,செண்ட் வாசனை
எல்லோரும் கூடிக் கொண்டாடும் விழா!
என் முதல் ஆண்டு நிறைவு விழா!
எல்லோரும் பாடுவர்
“ஹேப்பி பர்த்டே டு யு
டியர் ரமணி!
ஆனால் என் பெயர் ஸ்ரீனிவாச ராமானுஜ வெங்கடரமணன்!
வயது 10
வகுப்பில் என்று முதலிடம்
உறவும்,குருவும் வியக்கும் முதன்மை
இட்லி,தோசை ,சாம்பார் சட்னி
தயிர்சாதம் சாப்பிடச் சாப்பிடப்
சாப்பாட்டு ராமனாய் ஆகிறேனோ!
வயது 21
ஐஐடியில் பிடெக் முதல் வகுப்பு
இன்ஃபோசிஸ் வேலை
நாளை பறக்கிறேன் பெங்களூருவுக்கு
அப்புறம்....யு,எஸ்! என்றாவது!
வயது
26
நான்கு ஆண்டுகள் ஆயிற்று
யு எஸ் வாசம்.
தேடியும் கிடைக்கவில்லை
மனம்போல் பெண்
ஹூம்!
வயது
30
என் சுயம்பாகம் சாப்பிட்டு
நாக்கு செத்துப் போச்சு!
ஊருக்குப் போகும்போது
அம்மாவிடம் சொல்லி
சமைக்கத் தெரிந்த ஒரு
பெண்ணைக் கூட்டி வந்துடணும்—
கல்யாணம் பண்ணித்தான்!
வயது
45
இரண்டு குழந்தைகள் எனக்கு
அருமையாய்ப் பெயர்வைத்தேன்
கிருஷ்ணசாமி,மகாலக்ஷ்மி என
இன்றவர்கள் க்ரிஸ்,மேகியாகி விட்டார்கள்
கலாசாரம் சம்ப்ரதாயம்—ஊஹூம்!
வயிற்றில் பந்து சுருள்கிறது
அவர்களை எண்னி!
வயது
61
இப்போது நான் தஞ்சையில்
நானும் மனைவியும் மட்டும்
பிள்ளைகள் அமெரிக்காவில்
இந்தியா அவர்களுக்குப் பிடிக்கவில்லை!
வயது
75
இந்தியாவில் ஒரு புண்ணியக்ஷேத்திரம்
பாக்கியில்லை,எல்லாம் போயாச்சு!
நாளெல்லாம் டி.விதான் சீரியல்தான்!
என்ன வாழ்க்கை இது
?
என்ன ஆச்சு என் கனவுகள்?
ரெண்டு கல்யாணம்,ஒரு டைவர்ஸ்
எல்லாம் ஆச்சு பசங்களுக்கு!
என்ன ஆச்சு கலாசாரம்;
என்ன ஆச்சு பாரம்பரியம்
என்ன ஆச்சு குலப் பெருமை
எல்லாம் போச்சு!
போயே போச்சு!