Friday, December 28, 2012

பண்டிகைகளும் பலகாரங்களும்!



இந்த இந்துப்பண்டிகைகள் இருக்கின்றனவே,அவை நன்றாக வித விதமான உணவுகளைச் சாப்பிடுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டவையோ எனத் தோன்றுகிறது!

பாருங்களேன்…..இன்று திருவாதிரை..

சேந்தனார் பேரைச் சொல்லிக் களி,அதற்குத் துணையாக ஏழு கறிக்கூட்டு.களியில் கிடக்கும் முந்திரிப் பருப்புகள்,களியில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சாப்பிட்டால்...ஆகா !

அடுத்து பொங்கல் திருநாள்.நெய் சொட்டச் சொட்டச் சர்க்கரைப் பொங்கல்(ஆமாம்,அது வெல்லப் பொங்கல்தானே,பின் ஏன் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்கிறோம்?!),மெது வடை.பொழுது போகவில்லை என்றால் கடித்துத் துப்பக் கரும்பு! பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று பல வீடுகளில் போளி செய்வார்கள்.அந்தப் பருப்புப் போளியில் நல்ல நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டுமாம்…(ஹத்து போளி டப்பா நெய்!)

ராமநவமி!பானகம்,நீர்மோர்,வடைப் பருப்பு எனவித்தியாசமான ஐட்டங்கள்!

ஜன்மாஷ்டமி!குழந்தை கண்ணனின் பேரைச் சொல்லி நொறுக்குவதற்கு முறுக்கு, சீடை, அப்பம் வகையறாக்கள்.வெண்ணை வேறு.எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் வெண்ணையில் சர்க்கரை சேர்த்து உருட்டி விழுங்குவார்கள்....சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

விநாயகர் சதுர்த்தி...விநாயகருக்கு மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் பிடிக்கும்,எனவே அவர் கையிலேயே மோதகத்தைக் கொடுத்து விட்டோம்!மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலைக் குறிக்கும்!இந்தக் கொழுக்கட்டையிலேயே வெல்லக் கொழுக்கட்டை,உப்புக் கொழுக்கட்டை தவிர சிலர் எள்ளுக் கொழுக்கட்டை வேறு செய்வார்கள்.இத்தோடு பல விதமான பழங்கள் ”கபித்த, ஜம்புபலம்” என்று சொல்வார்கள்.அதாவது விளாம்பழம், நாவல்பழம்.அளவில்லாமல் கொழுக் கட்டை   தின்றால்,இந்தப் பழங்கள் ஜீரணத்துக்கு உதவுமாம்!

விதவிதமான இனிப்புகள் சாப்பிடுவதற்காக இருக்கவே இருக்கிறது தீபாவளி.வெறும் இனிப்பு போதுமா?காரம்,மிக்சர்,காராசேவு,ஓமப்பொடி என்று பலவும்.

கார்த்திகையன்று பொரி..அவல் பொரி,நெல்பொரி என இரண்டு வகைகள்.வெல்லப்பாகில் மூழ்கியவை.பலர் அப்பம்,வடை,அடையும் கூடச் செய்வார்கள்.

இவை தவிர பல சாதாரண விசேட தினங்களில் கண்டிப்பாகப் பாயசம் உண்டு…..சேமியா பாயசம்,அவல் பாயசம்,பால் பாயசம்,காரட் பாயசம்,பாதாம் பாயசம்,கேரளாவின் அடைப் பிரதமன்,சக்கைப் பிரதமன் என்று பெரிய லிஸ்ட்!மெது வடை,மசால் வடைகளும் உண்டு.மசால் வடைக்குப் வேறு பெயர்கள் பருப்பு வடை,ஆம வடை(ஆமை முதுகு போல் இருப்பதாலா?!)

ஆனால் அந்த நாளில் அதிக உடல் உழைப்பு இருந்தது,சாப்பிட்டது செரிமானம் ஆயிற்று. 

இந்நாளில் …

மறுநாள் சீரண மாத்திரைகளே துணை!

10 comments:

  1. பண்டிகை நாட்களில் தீணிக்கு பஞ்சமிருக்காது

    ReplyDelete
  2. அந்நாட்களில் வாகன வசதி குறைவானதால் நிறைய நடைப் பயிற்சி இருந்தது. நிறைய உழைத்ததால் செரிமானமும் அதிகம். இன்றைய நாளில் ரொம்ப கஷ்டம்தான்! இத்தனை பண்டிகைகளுக்கும் விதவிதமான உணவு வகைகளைப் பொருத்தமாய்க் கோர்த்து உணவுத் திருவிழா நடத்திய முன்னோர்களை வியக்காமல் இருக்க முடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடாம இருக்க முடியுமா?
      நன்றி பால கணேஷ் அவர்களே

      Delete
  3. சில தினங்கள் தானே விஷேசத்துக்குறியவை... சந்தோஷமாய் இருப்போம்

    ReplyDelete
  4. ஆண்டு காலண்டர் போல ஆண்டு முழுதும் கொண்டாடுகின்ற விழாக்களையும், விழாவின் பெயரை சொல்லிக்கொண்டு நாம் சாப்பிடுகின்ற பலகாரங்களையும் வரிசைப்படுத்தி, நாவில் எச்சில் ஊற வைத்து விட்டீர்கள்! இனி அவைகளை சாப்பிட விழா வரும் நாளுக்குக்காக காத்திருக்க வேண்டியதுதான். பதிவை இரசித்து சுவைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகிறது பொங்கல்!
      நன்றி சார்

      Delete
  5. சுவையான உணவுகள்தான்.நம் உணவில் சீனியும்,எண்ணெயும் அதிகம்.அதனாலேயே நோய்களும் அதிகம் !

    ReplyDelete
    Replies
    1. சரிதான்.
      ஆனால் சுவை இழுக்கிறதே!
      நன்றி

      Delete